கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி குழந்தையுடன் பெண் தர்ணா

கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி குழந்தையுடன் பெண் தர்ணாவில் ஈடுபட்டார்

Update: 2021-09-21 19:23 GMT
கரூர்
கரூர் செங்குந்தபுரத்தை சேர்ந்தவர் கவுசல்யா(வயது 34). இவருக்கு, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ஒருவருடன் திருமணம் நடைபெற்றது. பின்னர் அவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாக ரத்தாகி விட்டது. பின்னர் கவுசல்யாவிற்கும், காமராஜபுரத்தை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. அப்போது அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆனது பற்றி கவுசல்யாவிற்கு தெரியவில்லை என கூறப்படுகிறது. தற்போது இவர்களுக்கு 9 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது. கவுசல்யாவை திருமணம் செய்து கொண்டவர், மனைவி, குழந்தையை சரிவர கவனிக்காமலும், அவர்களை பார்ப்பதையும் தவிர்த்து வந்ததாக தெரிகிறது. இந்தநிலையில், நேற்று கணவரின் முதல் மனைவியின் வீட்டுக்கு சென்ற கவுசல்யா அங்கு தரையில் அமர்ந்து கணவரை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி குழந்தையுடன் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கவுசல்யாவிடம் பேச்சு நடத்தி, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து கவுசல்யா தர்ணா போராட்டத்தை கைவிட்டார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்