துபாயில் இருந்து உள்ளாடையில் மறைத்து கடத்தல் சென்னை விமான நிலையத்தில் ரூ.27½ லட்சம் தங்கம் பறிமுதல் - வாலிபர் கைது

துபாயில் இருந்து உள்ளாடையில் மறைத்து வைத்து சென்னை விமான நிலையத்துக்கு கடத்தி வந்த ரூ.27½ லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-09-22 10:58 GMT
ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வரும் சிறப்பு விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், அதிகாரிகள் பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது சென்னையை சோ்ந்த வாலிபர் ஒருவர் விமான நிலையத்தில் இருந்து நைசாக வெளியே செல்ல முயன்றாா். அதை கவனித்த சுங்க இலாகா அதிகாரிகள் சந்தேகம் அடைந்து அந்த பயணியை தடுத்து நிறுத்தி விசாரித் தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்து பார்த்தனர்.

ஆனால் அதில் எதுவும் சிக்கவில்லை. பின்னர், அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்ததில், உள்ளாடைக்குள் இருந்த 4 பிளாஸ்டிக் பார்சலை மறைத்து வைத்திருப்பதை கண்டுபிடித்தனா். அதை பிரித்து பார்த்தபோது, ரூ.27 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள 583 கிராம் தங்கம் இருப்பது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்த அதிகாரிகள் தங்கத்தை மறைத்து கடத்தி வந்த பயணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்