சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில் நிலைய அதிகாரிகள் ஆர்ப்பாட்டம்

சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில் நிலைய அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-09-23 10:50 GMT
சென்னை,

சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் நேற்று காலி பணியிடங்களை நிரப்புதல் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 30-க்கும் மேற்பட்ட ரெயில் நிலைய அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அகில இந்திய ரெயில் நிலைய அதிகாரிகள் சங்கத்தின் சென்னை கோட்ட தலைவர் பழனி கூறியதாவது:-

ரெயில்வேயில் ரெயில் நிலைய அதிகாரிகளுக்கான 180 காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதனால் எங்களால் அவசர காலகட்டத்தில் விடுமுறை எடுக்க முடியவில்லை. உடனடியாக அந்த காலி பணியிடங்களை ரெயில்வே நிர்வாகம் நிரப்ப வேண்டும். அதேபோல் 10 ஆண்டுகளாக ஒரே தரத்தில் பணிபுரிபவர்களுக்கு மத்திய அரசின் விதிப்படி பதவி உயர்வு வழங்கவேண்டும். ஆனால் 15 ஆண்டுகளாக பலருக்கும் பதவி உயர்வு வழங்கப்படாமல் உள்ளன. எனவே பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ரெயில்வேயை தனியார் மயமாக்குவதை நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்