ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை திருட்டு
ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை திருடியவரை போலீசாா் தேடி வருகின்றனா்.
மேல்மலையனூர்,
மேல்மலையனூர் அருகே அவலூர்பேட்டையை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மனைவி அன்பரசி (வயது 34). நேற்று முன்தினம் அன்பரசி தனது குழந்தைகளுடன் திருவண்ணாமலையில் இருந்து அவலூர்பேட்டைக்கு ஒரு தனியார் பஸ்சில் வந்தார்.
அப்போது, தனது கைப்பையில் 7 பவுன் நகையை வைத்திருந்தார். அவலூர்பேட்டை வந்த போது, கைப்பையில் இருந்த 7 பவுன் நகையைக் காணவில்லை. பஸ்சில் வந்த மர்ம மனிதர் திருடி சென்று இருப்பது தெரியவந்தது.
இதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் எனக் கூறப்படுகிறது. இது குறித்த புகாரின்பேரில் அவலூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.