மனைவியை தாக்கிய போலீஸ்காரர் கைது

மனைவியை தாக்கிய போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-09-25 19:36 GMT
பெரம்பலூர்:

போலீஸ் ஏட்டு மகள்
பெரம்பலூர் அருகே துறைமங்கலம் போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் சக்திவேல். இவர் வேப்பந்தட்டை தாலுகா அரும்பாவூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். சக்திவேலின் மகள் அமுதாவுக்கும் (வயது 20), அவர்களது தூரத்து உறவினரான கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தாலுகா புதுப்பட்டுவை சேர்ந்த சுந்தரத்தின் மகன் வீரமணிக்கும் (28) கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. வீரமணி 13&வது தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் ஆவடியில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் வீரமணிக்கும், அமுதாவிற்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் பெரியவர்கள் ஒன்று கூடி பேசி முறையாக கோர்ட்டில் விவாகரத்து வாங்க மனு தாக்கல் செய்து உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கணவரை விட்டு பிரிந்து அமுதா தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.
போலீஸ்காரர் கைது
இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் வீரமணி அமுதாவின் வீட்டிற்கு வந்து, அமுதாவையும், அவரது தாய் செல்வியையும் தகாத வார்த்தையால் திட்டி, அமுதாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அமுதா பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரமணியை கைது செய்து பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்