வாகனம் மோதியதில் தொழிலாளி தலை நசுங்கி பலி

வாகனம் மோதியதில் தொழிலாளி தலை நசுங்கி இறந்தார்.

Update: 2021-09-26 20:17 GMT
பெரம்பலூர்:
அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா, ஆதனக்குறிச்சி மெயின்ரோட்டை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் கோபி (வயது 31). கூலித் தொழிலாளியான இவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கோபி தனது அண்ணன் தாமோதரனிடம் மருந்து, மாத்திரைகள் முடிந்து விட்டதாகவும், அதனை வாங்குவதற்காக மருத்துவமனைக்கு சென்று வருவதாகவும் அவர் கூறிவிட்டு சென்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மருத்துவமனையில் மருந்து, மாத்திரைகளை வாங்கிவிட்டு, ஊருக்கு செல்வதற்காக மருத்துவமனை எதிரே உள்ள திருச்சி&சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஓரமாக நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் கோபி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே கோபி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்தும், அதனை ஓட்டி வந்தவர் யார்? என்பது குறித்தும் விசாரணை நடத்தி தேடி வருகின்றனர். விபத்தில் இறந்த கோபி திருமணமாகாதவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்