அச்சரப்பாக்கத்தில் துணிகரம் பேராசிரியர் வீட்டில் 104 பவுன் நகை-பணம் கொள்ளை

அச்சரப்பாக்கத்தில் கல்லூரி பேராசிரியர் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் 104 பவுன் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

Update: 2021-09-28 13:20 GMT
அச்சரப்பாக்கம்,

செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஊராட்சி ஒன்றியம் விளாங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயன். தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர். இவரது மகன் கார்த்திகேயன் (வயது 45). இவர் அச்சரப்பாக்கத்தில் உள்ள பெரியார்நகர் ஒத்தவாடை தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் செங்கல்பட்டு அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் மூத்த பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கார்த்திகேயன் சொந்த ஊரான விளாங்காடு கிராமத்தில் வசிக்கும் தனது பெற்றோரை பார்த்து வருவதற்காக கடந்த 25-ந்தேதி குடும்பத்துடன் சென்றுள்ளார்.

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு அச்சரப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

நகை-பணம் கொள்ளை

உடனே வீட்டிற்குள் சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த ரூ.80 ஆயிரமும், 104 பவுன் தங்க நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர் உடனடியாக அச்சரப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

தடயவியல் நிபுணர்களும் உடனடியாக வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவான கைரேகை தடயங்கள் சேகரிக்கப்பட்டது. மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டதில், அது சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து தகவலறிந்த செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்ராமு, மதுராந்தகம் துணை போலீஸ் சூப்பிரண்டு கவினா மற்றும் அச்சரப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர்.

தனிப்படை அமைப்பு

கொள்ளை சம்பவம் குறித்து அச்சரப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசன் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அச்சரப்பாக்கம் இளவரசன், மேல்மருவத்தூர் அமல்ராஜ் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகளும், மற்றும் மாவட்ட சிறப்பு பிரிவு போலீசாரும் கொண்ட படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்