கள்ளக்குறிச்சியில் பரபரப்பு உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை

கள்ளக்குறிச்சியில் பரபரப்பு உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை விதிகளை மீறி இணைப்பு வழங்கியதாக புகார்

Update: 2021-09-29 17:35 GMT
கள்ளக்குறிச்சி 

கள்ளக்குறிச்சி கணக்குப்பிள்ளை தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் கந்தசாமி. இவர் சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.ஐ.ஜி. அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், கள்ளக்குறிச்சியில் துருகம் சாலை பின்புறத்தில் உள்ள விவசாய நிலத்தில் ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வருபவர்கள் வீட்டுமனைகளாகவும், வீடு கட்டியும் விற்பனை செய்கிறார்கள். 

இவர்களுக்கு சாதகமாக மின்வாரிய உயர் அதிகாரிகள் மிகப்பெரிய மின்பாதை அமைத்து மின் இணைப்பு வழங்கி உள்ளனர். ஒரு மின் இணைப்பு பெற்று அதன் மூலம் பல வீடுகள் கட்டி வருகிறார்கள். விதிகளை மீறி வழங்கப்பட்டுள்ள இந்த இணைப்பு விவகாரம் குறித்து விசாரணை நடத்திட வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.
அதன்பேரில், கள்ளக்குறிச்சி நகர உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் திருச்சி மண்டல மின்சார வாரிய லஞ்ச ஒழிப்பு பிரிவு துணை சூப்பிரண்டு பிரபாகரன் நேற்று காலை 10.30 மணிக்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அந்த பகுதியில் மின் இணைப்பு கொடுக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் மின்கம்பங்கள், மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ள ஆவணங்களை ஆய்வு செய்தார். பின்னர் மின்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களிடம் விசாரணை நடத்தினார். மதியம் 12.30 மணிக்கு விசாரணையை முடித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்