குட்டையில் தவறி விழுந்து மாணவன் பலி

ஆண்டிப்பட்டி அருகே கல்குவாரி குட்டையில் தவறி விழுந்து மாணவன் ஒருவன் பலியாகினான்.

Update: 2021-10-07 18:08 GMT
ஆண்டிப்பட்டி: 

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள சித்தார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சக்திகுமரவேல். இவர், குருவியம்மாள்புரம் கிராமத்தில் உள்ள தனியார் தோட்டத்தில் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் ரிஷிகேசவன் (வயது 12). அதே பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்தான். 

நேற்று முன்தினம் காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற ரிஷிகேசவன் திரும்பி வரவில்லை. இது குறித்து க.விலக்கு போலீஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். புகாரின் பேரில் சிறுவனை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் குரும்பபட்டி அருகே உள்ள கல்குவாரி குட்டையில் தேங்கி இருந்த நீரில் ரிஷிகேசவன் பிணமாக மிதந்தான். தகவலறிந்த க.விலக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிறுவனின் உடலை கைப்பற்றினர். 

பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில், சிறுவனுக்கு வலிப்பு நோய் இருந்து உள்ளது. சம்பவத்தன்று கல்குவாரி குட்டை பகுதிக்கு சென்றபோது, அவனுக்கு வலிப்பு ஏற்பட்டதில் குட்டையில் தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.  

மேலும் செய்திகள்