கொத்தனாருக்கு அரிவாள் வெட்டு

மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கொத்தனாரை அரிவாளால் வெட்டிய அவரது நண்பர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2021-10-07 18:44 GMT
கிருஷ்ணராயபுரம்,
தகராறு
கிருஷ்ணராயபுரம் அடுத்த வீரராக்கியம் காமராஜ் பண்ணை பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவருடைய மகன் உதயகுமார் (வயது 26), கொத்தனார். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.
நேற்று முன்தினம் உதயகுமார் தனது நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் மது அருந்தி உள்ளார். அப்போது மது போதையில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.
அரிவாள்வெட்டு
இதில் ஆத்திரம் அடைந்த அவரது நண்பர்கள் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் உதயகுமாரை தலை, இடுப்பு ஆகிய பகுதிகளில் சரமாரியாக வெட்டினர். இதில் வலி தாங்காமல் உதயகுமார் அலறினார். இவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு வந்தனர். இதில் பீதியடைந்த உதயகுமாரின் நண்பர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இதையடுத்து, ரத்த வெள்ளத்தில் மிதந்த உதயகுமாரை அப்பகுதி மக்கள் மீட்டு கரூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
தலைமறைவு
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாயனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், உதயகுமாரை அரிவாளால் வெட்டி தலைமறைவாக உள்ள அதே பகுதியை சேர்ந்த பூபதி (22), கார்த்திக் (24), மேலும் அடையாளம் தெரியாத ஒரு வாலிபர் என 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்