5-வது கட்டமாக 909 இடங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் ஒரு லட்சம் பேருக்கு செலுத்த இலக்கு

கடலூர் மாவட்டத்தில் 5-வது கட்டமாக 909 இடங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது. இதில் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-10-08 16:38 GMT
கடலூர், 

கொரோனா 3-வது அலை

தமிழகத்தில் கொரோனா 3-வது அலை பரவாமல் தடுக்க 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் கடந்த 4 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் மாபெரும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இதில் கடலூர் மாவட்டத்தில் நடந்த முகாம்களில் மட்டும் 3 லட்சத்து 52 ஆயிரத்து 466 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 5-வது முறையாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாவட்டத்தில் மாபெரும் தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அன்று ஒரே நாளில் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி மையங்கள்

இந்த தடுப்பூசி முகாம்கள் நாளை காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள கிராம ஊராட்சி அலுவலகங்கள், வருவாய் ஆய்வாளர் அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள், பேருந்து மற்றும் ரெயில் நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் நடைபெறுகிறது. இதற்காக மாவட்டம் முழுவதும் 909 இடங்களில் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதனால் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி பயன்பெறலாம். மேற்கண்ட தகவலை கலெக்டர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்