மாநகர பஸ் சக்கரத்தில் சிக்கி 2 வாலிபர்கள் உடல் நசுங்கி பலி

துரைப்பாக்கத்தில் மோட்டார் சைக்கிளில் முந்தி செல்ல முயன்ற போது தடுமாறி கீழே விழுந்ததில், மாநகர பஸ் சக்கரத்தில் சிக்கி 2 வாலிபர்கள் உடல் நசுங்கி பலியானார்கள்.

Update: 2021-10-09 04:03 GMT
ஆலந்தூர்,

சென்னையை அடுத்த தாம்பரத்தில் இருந்து திருவான்மியூர் நோக்கி நேற்று மாநகர பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. துரைப்பாக்கம் ராஜீவ் காந்தி சாலையில் உள்ள மேட்டுக்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே பஸ் வந்த போது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் பஸ்சை வேகமாக முந்தி செல்ல முயன்றனர். அப்போது முன்னால் சென்ற மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி பலமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த 2 பேரும் தடுமாறி சாலையில் கீழே விழுந்தனர்.அப்போது பின்னால் வந்த மாநகர பஸ்சின் சக்கரம் சாலையில் விழுந்து கிடந்த 2 பேர் மீதும் ஏறி இறங்கியது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 பேரும் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்த கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியாகி கிடந்த 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பலியான 2 பேரும் துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்த அரவிந்த் (வயது 20), அஸ்வின் (19) என்பதும், அவர்கள் பெயிண்டிங் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இந்த விபத்து குறித்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்