ரூ466 கோடி கள்ளநோட்டுகள் பிடிபட்ட விவகாரம் இரிடியம் இருப்பதாக கூறி பண இரட்டிப்பு மோசடி போலீசில் சிக்கியவர்கள் பற்றி பரபரப்பு தகவல்கள்

கிருஷ்ணகிரியில் ரூ 466 கோடி கள்ளநோட்டுகள் பிடிபட்ட விவகாரத்தில் இரிடியம் இருப்பதாக கூறி பண இரட்டிப்பு மோசடியில் கும்பல் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

Update: 2021-10-10 17:48 GMT
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் ரூ.4.66 கோடி கள்ளநோட்டுகள் பிடிபட்ட விவகாரத்தில் இரிடியம் இருப்பதாக கூறி பண இரட்டிப்பு மோசடியில் கும்பல் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
கள்ளநோட்டு கும்பல் 
கிருஷ்ணகிரியில் சென்னை பைபாஸ் சாலை அருகில் பணம் இரட்டிப்பு செய்து தருவதாக மோசடி செய்யும் கும்பல் நடமாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து டவுன் போலீசார் அங்கு சென்று காரில் வந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்கள். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் காரைக்குடி கணேசன் (வயது 58), ஆந்திரா ரமேஷ் (52), இம்ரான்கான் (30) என தெரியவந்தது.
அவர்கள் பணம் இரட்டிப்பு செய்வதற்காக கிருஷ்ணகிரி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் கொடுத்த தகவலின்படி கிருஷ்ணகிரி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு சத்யசாய் நகரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்த மோசடி கும்பலை சேர்ந்த கிருஷ்ணகிரி சங்கர் (39), ராஜா என்கிற நாகராஜ் (33), ஜீவா (30), கேரளா ஜோஸ் என்கிற ஜோசப் (42), முகமது (34), விஜோ ஜான்சன் (35), பெங்களூரு முகமது கவுஸ் (29), ஈரோடு முருகேஷ் (28) ஆகியோரையும், பணத்தை இரட்டிப்பாக்க வந்த 3 பேரையும் என மொத்தம் 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரூ.4.66 கோடி பறிமுதல் 
இவர்களிடம் இருந்து 5 கார்கள், ரூ.4 கோடியே 66 லட்சம் கள்ள நோட்டுகள், ரூ.60 ஆயிரம் மற்றும் 22 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் தொடர்புடைய சென்னையை சேர்ந்த ஹரி, சூரப்பட்டி முனிராஜ் ஆகிய 2 பேர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கைதானவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் தங்களிடம் இரிடியம்(சக்தி வாய்ந்த கலசம்) உள்ளது. அதன் மூலம் பணத்தை இரட்டிப்பாக்கி தருவோம் என்று மூளைச்சலவை செய்துள்ளனர். இதை நம்பி சிலர் பணம் கொடுத்து ஏமாந்துள்ளனர். இதேபோல இந்த கும்பல் பல இடங்களில் கைவரிசை காட்டி உள்ளது. 
இவர்கள் பணம் கொடுப்பவர்களிடம், கள்ளநோட்டுகளை கட்டு கட்டாக வைத்து கொடுத்து ஏமாற்றி செல்வதும், பணஇரட்டிப்பாக்க இவர்கள் கிருஷ்ணகிரி வந்ததும் தெரியவந்தது.
இதற்கிடையே கைதானவர்களிடம் விசாரணை நடத்திய போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி, பிடிபட்ட கள்ள நோட்டுகளையும், பறிமுதல் செய்யப்பட்ட கார்களையும் நேற்று பார்வையிட்டார்.

மேலும் செய்திகள்