விபத்தில் 2 பேர் பலி

பல்லடத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள்.

Update: 2021-10-11 11:11 GMT
பல்லடம், 
பல்லடத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள். 
இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
விபத்து 
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் கிசோன் சிங் வயது 64. இவர் கடந்த 10 ஆண்டுகளாக பல்லடம் அருகே உள்ள சித்தம்பலத்தில் உள்ள விடுதியில் தங்கி  தனியார் காட்டன் மில்லில் பணிபுரிந்து வந்தார்.   இவர் நேற்று முன்தினம் பல்லடம் கடைவீதிக்கு வந்தார். பின்னர்  வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிவிட்டு மில்லுக்கு செல்வதற்காக பஸ் நிலையம் முன்பு சாலையை கடப்பதற்காக நின்றுகொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் கோவை குறிச்சியை சேர்ந்த சந்தோஷ் குமார் மகன் சாய்ராம்19 மற்றும் இவருடைய உறவினர் ரிஷிராம் 21 ஆகியோர் திருப்பூரில் இருந்து கோவை நோக்கி சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக சாய்ராம் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கிசோன்சிங் மீது மோதியது. அதன்பின்னரும் அந்த மோட்டார் சைக்கிள் நிற்காமல் நிலை தடுமாறி சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த, தடுப்பு கல்லில் மோதி விழுந்தது. இந்த விபத்தில் 3 பேரும் பலத்த பலத்த காயமடைந்தனர்.
2 பேர் பலி
உடனே அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவர்களை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கிசோன் சிங்கை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 
முதல் உதவி சிகிச்சைக்கு பின்னர்  மேல் சிகிச்சைக்காக சாய்ராம் மற்றும் ரிஷிராம் கோவை அரசுஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சாய்ராம் இறந்த விட்டார். ரிஷிராமுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-----------




மேலும் செய்திகள்