திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 657 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

Update: 2021-10-11 17:58 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 657 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. 

 குறைதீர்வு நாள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்  நேற்று கொரோனா விதிமுறைகளை பின்பற்றி மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.

இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேரில் வந்து தங்களின் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்களிடம் இருந்தும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்தும் பல்வேறு கோரிக்கை மனுக்களை கலெக்டர் முருகேஷ் நேரில் சென்று பெற்றுக் கொண்டார். 

இதில், கல்வி உதவித்தொகை, வங்கி கடன் உதவி, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, சாதிச்சான்று, வேலைவாய்ப்பு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 657 மனுக்கள் பெறப்பட்டன.

 நலத்திட்ட உதவிகள்

பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கலெக்டர் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். 

மேலும் நிலுவையில் உள்ள மனுக்களின் நடவடிக்கைகள் குறித்தும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கலெக்டர் ஆய்வு நடத்தினார். 

தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.45 ஆயிரம் 180 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் முருேகஷ் வழங்கினார். 

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமரசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனரும், கூடுதல் கலெக்டருமான பிரதாப், உதவி கலெக்டர் (பயிற்சி) கட்டா ரவி தேஜா, சமூக பாதுகாப்பு தனித்துணை கலெக்டர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்