எலச்சிபாளையம் அருகே மது குடிப்பதை தந்தை கண்டித்ததால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

எலச்சிபாளையம் அருகே மது குடிப்பதை தந்தை கண்டித்ததால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-10-11 18:18 GMT
எலச்சிபாளையம்:
மது குடிக்கும் பழக்கம்
எலச்சிபாளையம் அருகே உள்ள அவினாசிபட்டியை சேர்ந்தவர் ரங்கசாமி. இவருடைய மகன் சதீஷ்குமார் (வயது 26). இவர் எலச்சிபாளையத்தில் உள்ள ஒரு ஹலோ பிரிக்ஸ் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.
வேலைக்கு சென்று விட்டு தினமும் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததாக தெரிகிறது. இதனை அவருடைய தந்தை ரங்கசாமி கண்டித்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் சதீஷ்குமார் வீட்டுக்கு மது குடித்து விட்டு வந்தார்.
தற்கொலை
இதனால் ஆத்திரமடைந்த ரங்கசாமி, இனிமேல் மது குடிக்க கூடாது என்று அவரை கண்டித்தார். இதில் சதீஷ்குமார் மனமுடைந்தார். இதையடுத்து அவர் வீட்டில் விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை இறந்தார். இந்த தற்கொலை குறித்து எலச்சிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்