கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் மணல் குவாரி அமைக்க வலியுறுத்தி கலெக்டரிடம் மனு அளித்தனர்.

Update: 2021-10-11 19:36 GMT
கடலூர், 

கடலூர் மாவட்ட மாட்டு வண்டி தொழிலாளர் சங்க தலைவர் பொன்னம்பலம், மாவட்ட செயலாளர் திருமுருகன், பொருளாளர் செல்வராஜ், சி.ஐ.டி.யு. கருப்பையன் ஆகியோர் முன்னிலையில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.
பின்னர் அவர்கள் அனைவரும் கலெக்டர் அலுவலகத்திற்குள் செல்ல முயன்றனர். அவர்களை அங்கு பாதுகாப்புக்கு நின்ற புதுநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து அவர்களிடம் முக்கிய நிர்வாகிகள் மட்டும் சென்று கலெக்டரிடம் மனு அளிக்குமாறு வலியுறுத்தினர். இதையடுத்து முக்கிய நிர்வாகிகள் மட்டும் சென்று கலெக்டர் பாலசுப்பிரமணியத்திடம் மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

மணல் குவாரி அமைக்க வேண்டும்

கடலூர் மாவட்டத்தில் அரசு அனுமதிக்கும் மணல் குவாரிகளில் அனுமதி சீட்டு பெற்று 5 ஆயிரம் தொழிலாளர்கள் மாட்டு வண்டியில் மணல் எடுத்து விற்பனை செய்து, அதில் வரும் வருமானத்தை வைத்து குடும்பம் நடத்தி வருகிறோம். கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், விருத்தாசலம், ஸ்ரீமுஷ்ணம் ஆகிய தாலுகா பகுதிகளில் அரசு அனுமதித்திருந்த மணல் குவாரிகளை ரத்து செய்து விட்டனர்.
இதனால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வருமானம் இன்றி தவித்து வருகிறோம். மாட்டுக்கு தீவனம் வாங்க வழியின்றி அவதிப்பட்டு வருகிறோம். மணல் அள்ள முடியாததால் கட்டுமான தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இது பற்றி பல முறை மனு அளித்தும், அமைதியான வழியில் போராட்டம் நடத்தியும் பலன் இல்லை.

ஆகவே மாட்டு வண்டி தொழிலாளர்கள் நலன் கருதி, வான்பாக்கம், அக்கடவல்லி, வானமாதேவி, சி.என்.பாளையம், காமாட்சிபேட்டை, கிளியனூர், ஆதனூர், கூடலையாத்தூர், ஆதியூர், அம்புஜவல்லி பேட்டை, கொலப்பாக்கம் ஆகிய பகுதிகளில் மணல் குவாரி அமைத்து தர வேண்டும். மாவட்டம் முழுவதும் மாட்டு வண்டி தொழிலாளர்களை கணக்கீடு செய்ய வேண்டும். மாட்டு வண்டி குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்