இலங்கைக்கு ரூ.2 கோடி கஞ்சா கடத்த முயன்ற 4 பேர் தஞ்சை கோர்ட்டில் சரண்

இலங்கைக்கு ரூ.2 கோடி மதிப்புள்ள கஞ்சாவை கடத்த முயன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த 4 பேர் தஞ்சை கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்களை வருகிற 25-ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Update: 2021-10-11 20:12 GMT
தஞ்சாவூர்:
இலங்கைக்கு ரூ.2 கோடி மதிப்புள்ள கஞ்சாவை கடத்த முயன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த 4 பேர் தஞ்சை கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்களை வருகிற 25-ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
கஞ்சா கடத்த முயற்சி
நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு கடல் மார்க்கமாக கஞ்சா கடத்தப்படுவதாக கடந்த 26-ந்தேதி சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சுங்கத்துறை உதவி ஆணையர் செந்தில்நாதன், கண்காணிப்பாளர்கள் பாலமுரளி, ரமேஷ், கழுகாசலமூர்த்தி, ஆய்வாளர் மாசிலாமணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
அப்போது நாகை கீச்சாங்குப்பம் அருகே புதிய துறைமுகம் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான நிலையில், மீன்பிடி பைபர் படகில், பெரிய அளவிலான பொட்டலங்களை படகின் ஐஸ்பெட்டியில் ஏற்றிக் கொண்டிருப்பதை பார்த்தனர். உடனே அவர்களை பிடிக்க முயன்றனர்.
தப்பி ஓட்டம்
அப்போது, நான்கு பேர் ஆற்றில் குதித்தும், கரையில் நின்றுக்கொண்டிருந்த நான்கு பேரும் தப்பி ஓடி தலைமறைவாகினர். அப்போது, அதிகாரிகள் படகை சோதனை செய்த போது, சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான 280 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் படகு, 4 மோட்டார்சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக சுங்கத்துறையினர் தப்பி ஓடிய 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று தஞ்சை இன்றியமையாத பண்டங்கள் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சண்முகவேல் முன்னிலையில், படகு உரிமையாளர் குணசீலன், விஜய், சிவசந்திரன், மற்றொரு குணசீலன் ஆகிய நான்கு பேரும் சரணடைந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி 4 பேரையும் வருகிற 25-ந்தேதி(திங்கட்கிழமை) வரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து 4 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்