மது குடிப்பதை மகள் கண்டித்ததால் கத்தியால் குத்தி சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை முயற்சி

மது குடிப்பதை மகள் கண்டித்ததால் கத்தியால் குத்தி சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலைக்கு முயன்றார். சப்-இன்ஸ்பெக்டர் சாய்குமார் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

Update: 2021-10-12 04:59 GMT
திருமுல்லைவாயல் சத்யமூர்த்தி நகர் போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர் சாய் குமார் (வயது 50). இவருடைய மனைவி பவானி. இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். சாய்குமார், ஆவடியை அடுத்த வீராபுரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை 3-ம் பட்டாலியனில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.

சாய்குமாருக்கு குடிப்பழக்கம் இருப்பதாகவும், அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டுக்கு வருவதாகவும் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் குடிபோதையில் வீட்டுக்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் சாய்குமாரை, அவரது மூத்த மகள் சாய்சொரூபா கண்டித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த சாய்குமார், “எனக்கே நீ புத்தி சொல்கிறாயா?” என்று கூறி வீட்டில் இருந்த காய்கறி நறுக்கும் கத்தியால் தனது வயிற்று பகுதியில் குத்தி தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவரை மீட்டு வானகரம் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். தற்போது சப்-இன்ஸ்பெக்டர் சாய்குமார் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்