திண்டுக்கல், கொடைக்கானலில் பலத்த மழை
திண்டுக்கல், கொடைக்கானலில் பலத்த மழை பெய்தது.
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் நேற்று முன்தினம் மாலையில் பலத்த மழை பெய்தது. இதைத் தொடர்ந்து நேற்றும் காலையில் இருந்தே வானம் மேகமூட்டமாக காட்சி அளித்தது. இதனால் பகலில் சூரியனை முழுமையாக பார்க்க முடியவில்லை.
இதற்கிடையே மதியம் 12 மணி அளவில் லேசான சாரல் மழை பெய்ய தொடங்கியது. ஒருசில நிமிடங்களில் அது பலத்த மழையாக மாறியது. இந்த மழை சுமார் 30 நிமிடங்கள் பெய்தது. அதன்பின்னரும் விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது. இதையடுத்து மதியம் 2.20 மணிக்கு மீண்டும் மழை பெய்ய தொடங்கியது.
அப்போதும் சுமார் 30 நிமிடங்கள் வரை மழை கொட்டி தீர்த்தது. இதனால் பஸ்நிலையம், நாகல்நகர், திருச்சி சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அதேநேரம் திண்டுக்கல்லில் 2-வது நாளாக மழை பெய்ததால், இதமான குளிர் நிலவியது.
இதனிடையே தொடர் விடுமுறை காரணமாக கொடைக்கானல் பகுதியில் கடந்த 3 நாட்களாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் பலத்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று காலை 9 மணி வரை லேசான வெப்பம் நிலவி வந்த நிலையில், 10 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. பிற்பகல் 2 மணி வரை மழை நீடித்தது. இதன் காரணமாக குளிர் அதிகம் நிலவியது. இதனால் ஒரு சில சுற்றுலா பயணிகள் அறைகளிலேயே முடங்கினர்.
பலர் மழையில் நனைந்தபடியே சுற்றுலா இடங்களை கண்டு களித்தனர். மழைக்கு பின் நகர்பகுதியில் நிலவிய இதமான சீதோஷ்ண நிலையை ரசித்தும், செல்பி மற்றும் புகைப்படம் எடுத்தும் சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர்.