சாலையில் நடந்து சென்ற 2 பெண்களிடம் நகை பறிப்பு

நெல்லையில் சாலையில் நடந்து சென்ற 2 பெண்களிடம் நகை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2021-10-16 18:52 GMT
நெல்லை:
நெல்லையில் சாலையில் நடந்து சென்ற 2 பெண்களிடம் நகை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தனியார் நிறுவன ஊழியர்

நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் புதிய நூற்றாண்டு நகரைச் சேர்ந்தவர் முத்து விஜயன். இவருடைய மகள் பியூலா (வயது 28). தனியார் நிறுவன ஊழியரான இவர் நேற்று முன்தினம் இரவு பெருமாள்புரம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் திடீரென்று பியூலா கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர்.

மற்றொரு சம்பவம்

இதேபோன்று தென்காசி எஸ்.எம்.பி. தெருவை சேர்ந்த சித்திக் இஸ்மாயில் மனைவி செய்யது சர்மிளா பாத்திமா (28), பாளையங்கோட்டை மகாராஜா நகர் வேலவர் காலனியில் உள்ள தனது உறவினரை பார்ப்பதற்காக மகாராஜா நகர் ரவுண்டானா ரெயில்வே பீடர் தெருவில் நடந்து சென்றார்.

அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் திடீரென்று செய்யது சர்மிளா பாத்திமா கழுத்தில் கிடந்த 1¾ பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர்.

இதுகுறித்த புகார்களின்பேரில், பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பிரவினா வழக்குப்பதிவு செய்து, பெண்களிடம் நகை பறித்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்.

மேலும் செய்திகள்