இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் எடியூரப்பா 4 நாட்கள் பிரசாரம்

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தல் நடைபெறும் 2 தொகுதிகளில் எடியூரப்பா 4 நாட்கள் பிரசாரம் செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-10-17 22:07 GMT
பெங்களூரு:

சட்டசபை இடைத்தேர்தல்

  கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள சிந்தகி, ஹனகல் தொகுதிகளுக்கு வருகிற 30-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்து, தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. எடியூரப்பா முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகிய பிறகு முதல் முறையாக சட்டசபை இடைத்தேர்தல் நடக்கிறது.

  இந்த இடைத்தேர்தலில் எடியூரப்பா பிரசாரம் செய்வாரா?, மாட்டாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார். இந்த நிலையில் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா வருகிற 20-ந் தேதி முதல் 4 நாட்களுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்னடைவை சந்திக்கும்

  அதன்படி வருகிற 20, 21-ந் தேதிகளில் சிந்தகி தொகுதியிலும், 22, 23-ந் தேதிகளில் ஹனகல் தொகுதியிலும் எடியூரப்பா பிரசாரம் செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. எடியூரப்பா பிரசாரத்திற்கு வருவதால் பா.ஜனாவுக்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளது. எடியூரப்பா பிரசாரம் செய்யாவிட்டால் பா.ஜனதா பின்னடைவை சந்திக்கும் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

  தனது உதவியாளர் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தியதால் எடியூரப்பா அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டாலும், பா.ஜனதா தலைவர்களின் அழைப்பை ஏற்று அவர் பிரசாரம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்