1,250 கிலோ ரேஷன் அரிசி பதுக்கல்
சிவகாசி அருகே 1,250 கிலோ ரேஷன் அரிசி பதுக்கிய 4 பேர் சிக்கினர்.
சிவகாசி,
சிவகாசி அருகே 1,250 கிலோ ரேஷன் அரிசி பதுக்கிய 4 பேர் சிக்கினர்.
அரிசி பதுக்கல்
சிவகாசி-சாத்தூர் ரோட்டில் உள்ள அனுப்பன்குளம் அகதிகள் முகாம் பகுதியில் 4 பேர் சுற்றி திரிந்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த அகதிகள் முகாம் வாலிபர்கள் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை செய்த போது அவர்கள் திருநெல்வேலியை சேர்ந்த சிவா (வயது26), கோவில்பட்டியை சேர்ந்த மாடசாமி (35), மானூரை சேர்ந்த ராமர்பாண்டி (29), கயத்தாறை சேர்ந்த நல்லக்கண்ணு (23) என்பது தெரியவந்தது.
இவர்கள் சிவகாசியில் பல்வேறு பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து ரேஷன் அரிசிகளை குறைந்த விலைக்கு வாங்கி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
4 பேர் சிக்கினர்
இதையடுத்து 1,250 கிலோ ரேஷன் அரிசியையும், 4 வாலிபர்களையும் அகதிகள் முகாம் இளைஞர்கள் சிவகாசி கிழக்கு போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார், உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்த சம்பவம் சிவகாசி பகுதியில் நேற்று இரவு பரபரப்பை ஏற்படுத்தியது.