கஞ்சா வழக்கில் தேடப்பட்ட 6 பேர் கைது

கஞ்சா வழக்கில் தேடப்பட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-10-19 19:59 GMT
தா.பழூர்:

கஞ்சா விற்பனை
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோட்டியால் பஸ் நிறுத்தம் அருகே சிலர் கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலின்பேரில் தா.பழூர் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் கடந்த மாதம் அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான சிலர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர். அதில் ஒருவரை மட்டும் போலீசார் மடக்கி பிடித்தனர். 6 பேர் தப்பி ஓடி விட்டனர்.
பிடிபட்டவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கார்குடி காலனி தெருவில் வசிக்கும் ரவியின் மகன் கிடா என்ற ராஜ்குமார்(வயது 27) என்பதும், தப்பிச்சென்றவர்கள் கார்குடி காலனி தெருவை சேர்ந்த அன்பழகன் மகன் பிரபாகரன் (22), முத்து மகன் வீரவேல் (20), ரவிச்சந்திரன் மகன் வீரக்குமார் (22), தனுஷ் மகன் கபிலன் (23) தர்மலிங்கம் மகன் சின்னத்தம்பி (21) கோட்டியால் பாண்டிபஜார் பகுதியில் வசிக்கும் அண்ணாதுரை மகன் செங்குட்டுவன் (19) என்பதும், அவர்கள் விற்பனைக்காக கஞ்சாவை பிரித்து எடுத்துக் கொண்டு இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ராஜ்குமாரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலம் கைப்பற்றப்பட்டது.
6 பேர் கைது
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தப்பி ஓடிய 6 பேரையும் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிைலயில் நேற்று தா.பழூர் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட போலீசார் மதனத்தூர் கொள்ளிடக்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா வழக்கில் தேடப்பட்டு வந்த 6 பேரும் அப்பகுதியில் சுற்றித் திரிந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். இதையடுத்து அவர்கள் ஜெயங்கொண்டம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

மேலும் செய்திகள்