மும்பை பெண்ணின் காதலன் சிக்கினார்

மும்பை பெண்ணின் காதலன் சிக்கினார்

Update: 2021-10-19 20:38 GMT
சேலம், அக்.20-
சேலத்தில் அழகுநிலைய பெண் உரிமையாளர் கொலையில் தலைமறைவான மும்பை பெண்ணின் காதலனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அழகுநிலைய பெண் கொலை
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த தேஜ்மண்டல் (வயது 27) என்பவர் சேலம் குமாரசாமிப்பட்டியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். மாற்றுத்திறனாளியான இவர் சங்கர் நகர், பள்ளப்பட்டி ஆகிய இடங்களில் அழகுநிலையம் நடத்தி வந்தார். கடந்த 15-ந் தேதி தேஜ்மண்டல் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த கொலை தொடர்பாக தேஜ்மண்டலுடன் தங்கியிருந்த ஆத்தூரை சேர்ந்த பிரதாப் என்பவரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். அதில், தேஜ்மண்டல் நடத்திய அழகுநிலையத்தில் வேலைபார்த்த வங்காளதேசத்தை சேர்ந்த லப்லு, நிஷி, மும்பையை சேர்ந்த ரிஷி, பெங்களூருவை சேர்ந்த ஷீலா ஆகியோருக்கு இந்த கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
காதலனிடம் விசாரணை
இதையடுத்து தலைமறைவாக உள்ள அவர்கள் 4 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். மேலும் பிரதாப்பை தனிப்படை போலீசார் பெங்களூரு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மும்பையை சேர்ந்த ரிஷியின் காதலன் வினய் என்பவரை போலீசார் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவரிடம் தேஜ்மண்டல் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். ரிஷியை பிடிக்க தனிப்படையினர் மும்பை செல்ல திட்டமிட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்