விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நாகை இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் முன்பு கோவில் இடத்தில் குடியிருப்பவர்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-10-20 15:19 GMT
நாகப்பட்டினம்:
நாகை இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் முன்பு கோவில் இடத்தில் குடியிருப்பவர்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
ஆர்ப்பாட்டம் 
நாகை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாநில செயலாளர் நடராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட தலைவர் அம்பிகாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோவில் இடங்களில் குடியிருப்பவர்கள், குத்தகை விவசாயிகள் ஆகியோரை அச்சுறுத்தும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும். சட்டசபையில் அறிவித்தபடி தமிழக அரசின் சார்பில் உள்ள சீராய்வு மனுவை தாக்கல் செய்ய வேண்டும். சாகுபடி செய்யும் விவசாயிகள் அனைவருக்கும் ஆர்.டி.ஆர். பதிவு செய்ய வேண்டும். 
வாடகையை ரத்து செய்ய வேண்டும்
பல மடங்கு உயர்த்தப்பட்ட வாடகையை குறைக்க வேண்டும். கொரோனா நோய்தொற்று காலத்தில் உள்ள வாடகையை ரத்து செய்ய வேண்டும். கோவிலில் ஊழியம் செய்பவர்களுக்கும், கோவில் இடத்தில் குடியிருக்கும் ஏழை மக்களுக்கும் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர். 

மேலும் செய்திகள்