காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு

தேனி ஆயுதப்படை மைதானத்தில் 66 குண்டுகள் முழங்க காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. நீத்தார் நினைவு பீடத்தில் டி.ஐ.ஜி., கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அதிகாரிகள் மலர் வளையங்கள் வைத்து மரியாதை செலுத்தினர்.

Update: 2021-10-21 14:43 GMT
தேனி: 


வீரவணக்க நாள்
நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ந் தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. பணியின் போது வீரமரணம் அடைந்த போலீசாருக்கு அஞ்சலி செலுத்தி, அவர்களின் நினைவுகளை போற்றும் வகையில் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.

அதன்படி, தேனி ஆயுதப்படை போலீஸ் கவாத்து மைதானத்தில் நேற்று காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. இதற்காக அங்கு அமைக்கப்பட்டுள்ள நீத்தார் நினைவு பீடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.

 இந்த நினைவு பீடத்தில் திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. விஜயகுமாரி, மாவட்ட கலெக்டர் முரளிதரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

66 குண்டுகள்
அவர்களை தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் வித்யா, மாவட்ட தீயணைப்பு அலுவலர் கல்யாணகுமார், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் சக்திவேல், சங்கரன், பெரியகுளம் சப்-கலெக்டர் ரிஷப் மற்றும் போலீஸ் அதிகாரிகள், போலீசார் மலர் வளையங்கள் வைத்து மரியாதை செலுத்தினர்.
பின்னர், போலீசார் அணிவகுத்து நின்று வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு, 66 குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தினர். 

இதில் போலீஸ் அதிகாரிகள், வீரமரணம் அடைந்த போலீசாரின் குடும்பத்தினர் உள்பட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆயுதப்படை போலீஸ் துணை சூப்பிரண்டு இளமாறன், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்