மூலவைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

கடமலைக்குண்டு அருகே வெள்ளிமலை வனப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் மூலவைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Update: 2021-10-21 15:48 GMT
கடமலைக்குண்டு: 

கடமலைக்குண்டு அருகே  வெள்ளிமலை வனப்பகுதியில் மூலவைகை ஆறு உற்பத்தியாகிறது. போதிய அளவு மழை இல்லாததால் மூலவைகை ஆற்றில் குறைந்த அளவிலான நீர்வரத்து மட்டுமே காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வெள்ளிமலை வனப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக மூலவைகை ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வந்தது. நேற்று காலை திடீரென ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வழக்கமாக வடகிழக்கு பருவ மழையின் போது மூலவைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கம். 

ஆனால் தற்போது வடகிழக்கு பருவ மழைக்கு முன்பாகவே மூலவைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கிடையே ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறை கிணறுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் அடுத்த சில நாட்கள் வரை பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என ஒன்றிய நிர்வாகத்தினர் ஊராட்சி நிர்வாகங்கள் மூலம் கிராமங்களில் அறிவுறுத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்