குடும்பத்தகராறில் கணவன்-மனைவி தற்கொலை

குடும்பத்தகராறில் கணவன்-மனைவி தற்கொலை

Update: 2021-10-21 19:59 GMT
சங்ககிரி, அக்.22-
சங்ககிரி அருகே மதுபழக்கத்தால் ஏற்பட்ட குடும்பத்தகராறில் கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
திருமணம்
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள வைகுந்தம் சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (வயது 31). இவர் சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வந்தார். இவருக்கும், இருகாலூர் அரியாம்பாளையத்தை சேர்ந்த தங்கராசு மகள் பிரியா (28) என்பவருக்கும் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 31-ந் தேதி திருமணம் நடந்தது.
திருமணத்துக்கு பிறகு பிரியா வைகுந்தம் சந்தைப்பேட்டை பகுதியில் கணவருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கார்த்திக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இதனிடையே நேற்று முன்தினம் இரவு கார்த்தி மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததாக தெரிகிறது. இதனால் கார்த்திக்கும், பிரியாவுக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. அவர்களை . கார்த்தியின் தாயார் சமாதானம் செய்து வைத்துள்ளார். 
தற்கொலை
இந்த நிலையில், நேற்று காலை 6 மணியளவில் வீட்டில் பிரியா சமையல் செய்ய சென்றபோது கார்த்தி, பிரியாவின் அண்ணன் தேவராஜுக்கு போன்போட்டு உன் தங்கை கிட்ட பேசு, உன்தங்கை தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறுகிறார் என்றுக் கூறி பிரியாவிடம் போனை கொடுத்தார்.
 ஆனால் பிரியா, கார்த்தியிடம் எதற்காக என் அண்ணனுக்கு போன் செய்த எனக்கூறி மீண்டும் தகராறு செய்துள்ளார். பின்னர் காலை 6.30 மணியளவில் பிரியா வீட்டில் படுக்கை அறைக்கு சென்று மின்விசிறியில் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனிடையே மனைவி தற்கொலை செய்து கொண்டதை அறிந்து மனவேதனை அடைந்த கார்த்தி காலை 7.30 மணியளவில் வைகுந்தம் செல்லியம்மன் கோவில் அருகே ஏரிக்கரைக்கு சென்றார். அங்கு கிடந்த பாட்டிலை எடுத்து உடைத்து, கழுத்தை அறுத்து கொண்டு பிறகு அங்குள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
விசாரணை
இது குறித்த புகாரின் பேரில் சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து போலீசார் 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்ககிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பிரியாவுக்கு திருமணமாகி 1 வருடம் ஆன நிலையில் சங்ககிரி உதவி கலெக்டர் வேடியப்பனும் விசாரணை நடத்தி வருகிறார். 
குடும்பத்தகராறில் கணவன்-மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்