ஆக்கிரமிப்பு அகற்றத்தை கண்டித்து வியாபாரிகள் மறியல்

வந்தவாசியில் ஆக்கிரமிப்பு அகற்றத்தை கண்டித்து வியாபாரிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-10-22 15:51 GMT
வந்தவாசி

வந்தவாசியில் ஆக்கிரமிப்பு அகற்றத்தை கண்டித்து வியாபாரிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

ஆக்கிரமிப்பு அகற்றம்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் பிரதான சாலைகளான ஆரணி சாலை, பஜார் வீதி, காந்தி சாலை, அச்சரப்பாக்கம் சாலை ஆகிய இடங்களில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வந்தது. இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது.

அதன்படி இன்று அரசுக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டனர். ஆனால் ஆக்கிரமிப்பு அகற்றம் குறித்து முன்கூட்டியே தகவல் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

வியாபாரிகள் மறியல்

இதனை கண்டித்து பிரிக்கப்பட்ட கூரை தகடுகளை சாலையில் போட்டு அதன்மேல் அமர்ந்து வியாபாரிகள் மறியலில் ஈடுபட்டனர். 

இதுபற்றி தகவல் அறிந்து வந்த துணைபோலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ்வரய்யா பேச்சுவார்த்தை நடத்தினார். அவருடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதைத் தொடர்ந்து வியாபாரிகள் தாங்களாகவே ஆக்கிரமிப்பை அகற்றிக்கொள்ள அவகாசம் கேட்ட நிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்