லஞ்சம் வாங்கிய வழக்கில் வருவாய் உதவியாளருக்கு 2 ஆண்டு சிறை விழுப்புரம் கோர்ட்டு தீர்ப்பு

லஞ்சம் வாங்கிய வழக்கில் வருவாய் உதவியாளருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2021-10-22 17:55 GMT
விழுப்புரம், 

செஞ்சியை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 40). இவர் செஞ்சி நகரில் நகை அடகு கடை வைப்பதற்கு உரிமம் வழங்கக்கோரி கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் செஞ்சி தாலுகா அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த வருவாய் உதவியாளரான வேலு (43) என்பவரை அணுகினார்.

அதற்கு நகை அடகு கடைக்கு உரிமம் வழங்க ரூ.3,500 லஞ்சமாக தர வேண்டும் என்று வேலு கறாராக கூறினார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ராஜேஷ்குமார், இதுபற்றி விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்ய, போலீசார் கூறிய அறிவுரைப்படி ரசாயன பொடி தடவிய லஞ்சப்பணத்தை எடுத்துக்கொண்டு வேலுவிடம் கொடுத்தார். 

அந்த பணத்தை வாங்கியபோது வேலுவை லஞ்ச ஒழிப்பு போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர் துறை ரீதியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.


இதுதொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.


வழக்கை விசாரித்த நீதிபதி (பொறுப்பு) கோபிநாதன், குற்றம் சாட்டப்பட்ட வேலுவுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், இந்த அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார். 

சிறை தண்டனை விதிக்கப்பட்ட வேலு தற்போது திண்டிவனத்தில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்