மணமேல்குடி அருகே டீக்கடைக்குள் புகுந்த லாரி மோதி முதியவர் பலி

டீக்கடைக்குள் புகுந்த லாரி மோதி முதியவர் பலியானார்.

Update: 2021-10-23 18:37 GMT
மணமேல்குடி:
மணமேல்குடி அடுத்த கிருஷ்ணாஜிபட்டினம் பகுதியை சேர்ந்தவர் பைசல்முகம்மது. இவர் நேற்று காரில் கிருஷ்ணாஜிபட்டினம் கடைவீதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது நாகப்பட்டினத்திலிருந்து சரக்கு ஏற்றி வந்த லாரி எதிர்பாராதவிதமாக கார் மீது மோதி, அருகிலிருந்த டீ கடைக்குள் லாரி புகுந்தது. இதில் டீக்கடையில் டீ குடித்துக்கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த முகம்மது ரசாக் (வயது 65) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். முத்துக்குமார் என்பவர் படுகாயமடைந்தார். மேலும் லாரி மோதியதில் காருக்குள் இருந்த பைசல் முகம்மது, ஹபீப் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். தகவலறிந்த மணமேல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாமுவேல்ஞானம், தாசில்தார் ராஜா மற்றும் அதிகாரிகள் ஆகியோர் விரைந்து வந்து சரக்கு லாரியை அப்புறப்படுத்தி படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மணமேல்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதற்கிடையே போலீசார் விபத்தில் பலியான முகம்மது ரசாக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மணமேல்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்