லாரி மீது மினி லாரி மோதி தீ விபத்து; வியாபாரி பலி

சிறுபாக்கம் அருகே லாரி மீது மினிலாரி மோதியதில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் வியாபாரி சிக்கி பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-10-23 19:00 GMT
சிறுபாக்கம், 

விருத்தாசலம் அருகே முல்லா தோட்டத்தை சேர்ந்தவர் ராஜாமுகமது (வயது 60) காய்கறி மொத்த வியாபாரி. இவர் நேற்று அதிகாலை சேலம் மாவட்டம் தலைவாசலில் உள்ள மார்கெட்டில் காய்கறிகளை ஏற்றுவதற்காக  விருத்தாசலத்தில் இருந்து மினிலாரியில் புறப்பட்டார். மினி லாரியை சித்தலூரை சேர்ந்த மணிகண்டன் (41) என்பவர் ஓட்டினார். 
விருத்தாசலம் - சேலம் சாலையில் சிறுபாக்கம் சோதனைச் சாவடி அருகே வந்த போது, நெய்வேலியில் இருந்து நிலக்கரி ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று முன்னால் சென்று கொண்டிருந்தது.
 இந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக மினிலாரி பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் மினி லாரி திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இதில் ராஜாமுகமது சிக்கி தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மணிகண்டன் பலத்த காயமடைந்தார்.

போலீசார் விசாரணை

 அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே இது பற்றி தகவல் அறிந்து வந்த வேப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சண்முகம் தலைமையிலான வீரர்கள், மினிலாரி மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அனைத்தனர்.
 இந்த சம்பவத்தால், விருத்தாசலம் - சேலம் சாலையில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் சிறுபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்