பேய் விரட்டுவதாக கணவன் உதைத்ததில் இளம்பெண் சாவு

பேய் விரட்டுவதாக கூறி கணவன் உதைத்ததில் உடல்நலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

Update: 2021-10-25 17:45 GMT
காரைக்குடி, 
பேய் விரட்டுவதாக கூறி கணவன் உதைத்ததில் உடல்நலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
மனைவியை மிதித்தார்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருேக சோமநாதபுரம் போலீஸ் சரகம் சங்கராபுரத்தை சேர்ந்தவர் பழனி. இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பொம்மி (வயது 27). இவர்களுக்கு திருமணமாகி 3 வருடங்கள் ஆகிறது.  
கடந்த வாரம் பழனி, பொம்மி ஆகியோர் வீட்டில் இருந்த போது பழனி திடீரென சாமியாடி பொம்மிக்கு பேய் பிடித்துள்ளதாகவும் அதனை விரட்டுவதாக கூறி விபூதி பூசிவிட்டார்.
பின்னர் திடீரென பொம்மியின் முதுகில் ஓங்கி மிதித்து விட்டு, பேய் போய்விட்டது என்றும், சாமி மலை ஏறிவிட்டது என்றும் கூறியுள்ளார். 
பரிதாப சாவு
இந்தநிலையில் பொம்மி தீராத முதுகு வலியால் அவதிப்பட்டார். அதனால் காரைக்குடி அருணா நகரில் உள்ள அவரது தாயார் வீட்டிற்கு வந்தார். இந்தநிலையில் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பொம்மி பரிதாபமாக உயிரிழந்தார். 
இதுகுறித்த புகாரின்பேரில் சோமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆகி 3 வருடங்களே ஆன காரணத்தால் ஆர்.டி.ஓ. பிரபாகரன் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்