கூலிப்படையை ஏவி வாலிபர் கொலை; திருச்சி சிறையில் உள்ள 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

கூலிப்படையை ஏவி வாலிபரை கொலை செய்த வழக்கில் திருச்சி சிறையில் உள்ள 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-10-26 18:43 GMT
அரவக்குறிச்சி,
வாலிபர் கொலை
அரவக்குறிச்சி அருகே சூரப்பநாயக்கனூரை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவருடைய மகன் ரமேஷ் (வயது 24). இவர் பள்ளப்பட்டி அருகே பூமதேவத்தை சேர்ந்த பெருமாள்சாமி (54) என்பவருடைய எண்டர்பிரைசஸ் கடையில் வேலை பார்த்து வந்தார். கடந்த ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு ரமேஷ் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
லிங்கமநாயக்கன்பட்டி ஊராட்சி புளியம்பட்டி பயணிகள் நிழற்குடை அருகில் வந்தபோது  ரமேஷை மர்ம ஆசாமிகள் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர். இந்த சம்பவம் குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
5 பேர் கைது
இந்த கொலை வழக்கில் தொடர்புடைய திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா மேலகோவில்பட்டியை சேர்ந்த பிரவீன்குமார் (31), ராபர்ட் (22), தும்பலப்பட்டியை சேர்ந்த அழகு சரவணன் (27), வேல்முருகன் (27) ஆகிய 4 பேரை கடந்த மாதம் 16-ந் தேதி போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் 4 பேரும் அரவக்குறிச்சி சார்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 
மேலும், இந்த கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த சூரப்பநாயக்கனூரை சேர்ந்த சண்முக வேலுவை (31) போலீசார் கைது செய்தனர். விசாரணையில் சண்முக வேலுவின் மனைவிக்கும், அவரது அண்ணிக்கும் ரமேஷ் அடிக்கடி தொந்தரவு கொடுத்ததால் கூலி படையினர் மூலம் அவரை கொலை செய்தது தெரியவந்தது. பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
குண்டர் சட்டம்
இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான பிரவீன்குமார், சண்முகவேல் ஆகியோர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் பரிந்துரையின்படி குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவு பிறப்பித்தார். 
இதைத்தொடா்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள 2 பேரிடமும் அதற்கான நகல் நேற்று வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்