அரிவாளால் வெட்டப்பட்ட விவசாயி சாவு; கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை

கடையநல்லூர் அருகே அரிவாளால் வெட்டப்பட்ட விவசாயி இறந்தார். இதையடுத்து இந்த வழக்கை, கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-10-26 20:21 GMT
அச்சன்புதூர்:
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டி அரண்மனை தெருவைச் சேர்ந்தவர் கருத்தப்பாண்டி (வயது 64), விவசாயி. இவரது மகன் கார்த்திகேயன் (32). இவர்களுக்கு சொந்தமான வயல் பகுதி வைரவன்குளத்தில் உள்ளது. இந்த வயல்களுக்கு அருகில் சொக்கம்பட்டி கர்ணம் தெருவைச் சேர்ந்த சந்தனபாண்டியன் (40) என்பவருக்கு சொந்தமான வயலும் உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கருத்தப்பாண்டி, அவரது மகன் கார்த்திகேயன் ஆகியோர் வயல் வரப்பு பகுதியில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தனர். அப்போது, அங்கு வந்த சந்தனபாண்டியன் நீங்கள் எப்படி வரப்பை வெட்டலாம் என்று அவதூறாக பேசி, தகராறு செய்ததாக தெரிகிறது.மேலும், ஆத்திரம் அடைந்த சந்தனபாண்டியன் தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் கருத்தப்பாண்டியை வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் சொக்கம்பட்டி போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து, சந்தன பாண்டியனை ஏற்கனவே கைது செய்து, சிறையில் அடைத்து இருந்தனர்.
இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கருத்தப்பாண்டி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து போலீசார், கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்