அமராவதி அணை மீண்டும்முழு கொள்ளளவை நெருங்கும் நிலையில் உள்ளது.

அமராவதி அணை மீண்டும்முழு கொள்ளளவை நெருங்கும் நிலையில் உள்ளது.

Update: 2021-10-27 16:40 GMT
தளி, 
அமராவதி அணையின் நீர்ப் பிடிப்பு பகுதியில் மழை பெய்வதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை மீண்டும்முழு கொள்ளளவை நெருங்கும் நிலையில் உள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
அமராவதி அணை
உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை உள்ளது. இந்த அணை மூலம் பழைய ஆயக்கட்டு மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்திட்டத்தின் மூலம் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 
மேற்குத் தொடர்ச்சி  வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற சின்னாறு, தேனாறு, பாம்பாறு ஆகிய ஆறுகள் இந்த அணையின் நீராதாரங்கள் ஆகும்.  அப்போது வனப்பகுதியில் நீர்வழித்தடங்களில் தேங்கியுள்ள மூலிகைகள் வெள்ளப்பெருக்கால் அணைப் பகுதிக்கு அடித்து வரப்படுகிறது. இதனால் அணையில் தேங்கியுள்ள தண்ணீர் இயல்பாகவே சுவையுடையதாக திகழ்கிறது. 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அணையின் நீர் பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. 
வெள்ள அபாய எச்சரிக்கை
இதனால் அணையின் நீர் இருப்பு படிப்படியாக உயர்ந்து நேற்று மாலை 6 மணியளவில் 85 அடியை கடந்தது. அதைத் தொடர்ந்து உதவி பொறியாளர் பாபுசபரீஸ்வரன் உள்ளிட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணைப்பகுதியில் முகாமிட்டு உள்ளனர். மேலும் அமராவதி ஆற்றின் கரையோரம் வசித்து வருகின்ற பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி அணையில் பொருத்தப்பட்டுள்ள எச்சரிக்கை கருவி மூலம் ஒலியும் எழுப்பப்பட்டது. 
மேலும் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் வானம் மேகமூட்டமாக காணப்படுவதுடன் கனமழை பெய்வதற்கான சூழலும் நிலவி வருகிறது.  மேலும் நீர்வரத்து அதிகரித்து அணை அதன் முழு கொள்ளளவை நெருங்கினால் அமராவதி ஆற்றில் உபரி நீர் திறந்து விடுவதற்கான நடவடிக்கைகளும் அதிகாரிகள் தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நேற்றுமாலை 6 மணி நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அணையின் மொத்த நீர்ப்பரப்பில் 85.04 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 655 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. ஏற்கனவே அமராவதி அணை கடந்த  2 மாதங்களுக்கு முன்பு நிரம்பிய நிலையில், மீண்டும் நிரம்பும் தருவாயில் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்