இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 2 பேர் விடுவிப்பு

இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட 2 தமிழக மீனவர்கள் நேற்று விடுவிக்கப்பட்டனர்.

Update: 2021-10-27 16:54 GMT
ராமேசுவரம், 

இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட 2 தமிழக மீனவர்கள் நேற்று விடுவிக்கப்பட்டனர். 

மீனவர் சாவு

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியில் இருந்து கடந்த 18-ந் தேதி ஒரு விசைப்படகில் ராஜ்கிரண் (வயது 30) சுகந்தன் (23), அந்தோணி சேவியர் (32) ஆகிய 3 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். கோடியக்கரை அருகே உள்ள நடுக்கடலில் மீன்பிடித்த போது அந்த வழியாக வந்த இலங்கை கடற்படை ரோந்து கப்பல், அந்த மீனவர்களின் விசைப்படகு மீது மோதியது.
இதில் படகில் இருந்த 3 பேரும் கடலில் விழுந்து தத்தளித்தனர். இதில் அந்தோணி சேவியர், சுகந்தன் 2 பேரை மட்டும் மீட்டு இலங்கை கடற்படையினர் ஊர்க்காவல்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். மற்றொரு மீனவர் ராஜ்கிரண் 2 நாட்களுக்குப்பிறகு கடலில் பிணமாக மீட்கப்பட்டார்.

2 மீனவர்கள் விடுதலை

இந்த நிலையில் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் அந்தோணி சேவியர், சுகந்தன் 2 பேரும் நேற்று ஊர்காவல்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது 2 மீனவர்களையும் விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார். அவர்கள் 2 பேரும் இலங்கை மெரினா கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 
அந்த 2 மீனவர்களும் விரைவில் விமானம் மூலம் தமிழகத்திற்கு அழைத்து வரப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட அனைத்து விசைப்படகு மீனவர் சங்க ஒருங்கிணைப்பாளர் சேசுராஜா தெரிவித்தார்.

23 மீனவர்கள் 

இதனிடையே ஏற்கனவே இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் தவித்து வரும் நாகை, காரைக்காலைச் சேர்ந்த 23 மீனவர்கள் இன்று(வியாழக்கிழமை) ஊர்க்காவல்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுவார்களா? அல்லது காவல் நீட்டிப்பு செய்யப்படுமா? என்பது குறித்து இன்று தான் தெரியவரும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் செய்திகள்