தூய்மை பணியாளர்கள்-காவலர்கள் ஆர்ப்பாட்டம்

ஊதியத்தை உயர்த்தி வழங்கக்கோரி தூய்மை பணியாளர்கள், காவலர்கள் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-10-27 17:21 GMT
திண்டுக்கல்: 

தமிழ்நாடு கிராம ஊராட்சி குடிநீர் மேல்நிலைத்தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் சங்கம் சார்பில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் பெருமாள் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் குருசாமி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மாநில தலைவர் கிருஷ்ணசாமி கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது மேல்நிலைத்தொட்டி இயக்குபவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.6 ஆயிரத்து 500 வழங்க வேண்டும். மேலும் 16 ஆயிரத்து 508 தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் மற்றும் கல்வி தகுதிக்கேற்ப பதவி உயர்வு வழங்க வேண்டும். அதேபோல் தூய்மை காவலர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக மாதந்தோறும் ரூ.7 ஆயிரத்து 100 வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இதில் மாவட்ட பொருளாளர் சந்தியாகு, துணை தலைவர்கள் ராஜேந்திரன், தங்கராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள், குடிநீர் மேல்நிலைத்தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்