ஆபாச படம் அனுப்பி வங்கி பெண் அதிகாரி கணவரிடம் பணம் பறித்த 2 பேர் கைது

கரூரில் ஆபாச படம் அனுப்பி வங்கி பெண் அதிகாரி கணவரிடம் பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், லேப்டாப், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2021-11-05 18:27 GMT
கரூர்
ஆபாச படம் 
கரூரில் உள்ள வங்கி ஒன்றில் உதவி மேலாளராக பணிபுரிந்து வரும் பெண் ஒருவர் கரூர் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்று கொடுத்திருந்தார். அந்த மனுவில், கடந்த சில நாட்களுக்கு முன்பு எனது கணவரின் செல்போன் வாட்ஸ்-அப் எண்ணுக்கு புதிய எண்ணில் இருந்து ஒரு பெண்ணின் ஆபாச படம் வந்தது. 
பணம் பறிப்பு
பின்னர் அந்த எண்ணில் இருந்து மர்ம ஆசாமி ஒருவர் எனது கணவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு இதைபோல் உனது மனைவியின் ஆபாச படம் என்னிடம் உள்ளது. அதை இணையதளத்தில் வெளியிட்டு விடுவதாக கூறி பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதனால் எனது கணவர் ஆன்லைன் மூலம் ரூ.49 ஆயிரம் அனுப்பி உள்ளார். பின்னர் மீண்டும் எனது கணவரை தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இது தொடர்பாக கரூர் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.  
2 பேர் கைது
விசாரணையில், வங்கி அதிகாரியின் கணவரிடம் பணம் பறித்தது அஜித்குமார் (49), பிரசாந்த் (27) என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து, ரூ.3 லட்சம் பணம், மோட்டார் சைக்கிள், பாஸ்போர்ட், லேப்டாப், 14 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர்கள் கரூர் கிளைசிறையில் அடைக்கப் பட்டனர்.

மேலும் செய்திகள்