வாலிபர் கொலை வழக்கில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
வாலிபர் கொலை வழக்கில் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
அரவக்குறிச்சி
அரவக்குறிச்சி அருகே உள்ள சூரப்பநாயக்கனூரை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி மகன் ரமேஷ் (வயது24). இவர் பள்ளப்பட்டியில் ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார். கடந்த ஆகஸ்டு 15-ந்தேதி இரவு ரமேஷ் வேலையை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டார். அப்போது லிங்கமநாயக்கன்பட்டி ஊராட்சி புளியம்பட்டி பயணியர் நிழற்குடை அருகே மர்மநபர்களால் ரமேஷ் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த கொலை தொடர்பாக அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து திண்டுக்கல் மேலகோவில்பட்டியை சேர்ந்த பிரவீன்குமார் (31), ராபர்ட் (22), திண்டுக்கல் தும்பலப்பட்டியை சேர்ந்த அழகுசரவணன் (27), வேல்முருகன் (27), அரவக்குறிச்சி அருகே உள்ள சூரப்ப நாயக்கனூரை சேர்ந்த சண்முகவேல் (31) ஆகிய 5 பேரை கைது செய்து திருச்சி சிைறயில் அடைத்தனர். பிரவீன்குமார், சண்முகவேல் ஆகியோர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
இந்தநிலையில் அழகு சரவணன், ராபர்ட், வேல்முருகன் ஆகிய 3 பேரும் ஆதாயத்திற்காக கொலை செய்யும் கூலிப்படையாக செயல்பட்டதாக கூறி அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல், கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கருக்கு பரிந்துரை செய்தார். அதன்படி கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர், 3 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய நேற்று உத்தரவிட்டார். அதன்படி திருச்சி சிறையில் உள்ள 3 பேரிடம் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை போலீசார் வழங்கினர்.