வாலிபர் வெட்டிக்கொலை
ராமநாதபுரம் அருகே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்
பனைக்குளம்,
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் புதுவலசை அருகேயுள்ள தாவுக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் கோபாலகிருஷ்ணன் (வயது 24).
அதே ஊரைச் சேர்ந்தவர் கோகுல்ராஜ் (24). இவருடைய மனைவி முத்துலட்சுமி(20). கோபாலகிருஷ்ணனுக்கும், முத்துலட்சுமிக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் இவர்கள் இருவரும் வீட்டை விட்டு காணாமல் போனதாக தெரிகிறது.
இதற்கிடையே மனைவி கள்ளக்காதலனுடன் ஓடி போனதால் கோகுல்ராஜ், கோபாலகிருஷ்ணன் மீது ஆத்திரத்தில் இருந்தார். இந்த நிலையில் நேற்று மாலை தாவுக்காடு கிராமத்தில் இருந்த கோபாலகிருஷ்ணனிடம் கள்ளக்காதலை கைவிடும்படி கோகுல்ராஜ் கூறி உள்ளார். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
உடனே ஆத்திரத்தில் கோகுல்ராஜூம், அவரது உறவினர் விஜயகுமார்(28) ஆகியோர் சேர்ந்து கோபாலகிருஷ்ணனை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். பின்னர் அவர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் தேவிபட்டிணம் போலீசார் விரைந்து சென்று கோபாலகிருஷ்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிேசாதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
.