20 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

சாலையோர பள்ளத்தில் சிக்கிய லாரியில் 20 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-11-11 19:33 GMT
நெல்லை:

பாளையங்கோட்டை கிருபா நகரில் சாலையோர பள்ளத்தில் மணலில் புதைந்து சிக்கியவாறு லாரி நின்றது. அதில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி இருப்பதாக நெல்லை மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, லாரியை சோதனை செய்தனர். 

அப்போது லாரியில் மூட்டைகளில் 20 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் ரேஷன் அரிசியை லாரியில் ஏற்றி வரும் போது லாரியின் சக்கரம் பள்ளத்தில் சிக்கியதால், டிரைவர் லாரியை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டது தெரியவந்தது. மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரியை ஓட்டி வந்தது யார்?, ரேஷன் அரிசி எங்கிருந்து கடத்தி வரப்பட்டது? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்