திருப்பத்தூர்,
திருப்பத்தூரில் காளியம்மன் கோவில் பின்புறம் உள்ள மாதவன் நகர் பகுதியில் உள்ள மணிமேகலை என்பவர் வீட்டில் நல்ல பாம்பு ஒன்று புகுந்தது. அதைக் கண்டு அச்சமடைந்த மணிமேகலை திருப்பத்தூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். நிலைய அலுவலர் சடையாண்டி தலைமையிலான குழுவினர் அங்கு சென்று பாம்பைத் தேடினர். அப்போது பாம்பு ஓட்டு வீட்டின் மேற் கூரை மீது ஏறி படமெடுத்த நிலையில் நின்றது. இதனைக் கண்ட தீயணைப்புத் துறையினர் மேற்கூரைமீது ஏறி சுமார் 6 அடி நீளமுள்ள நல்லபாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் பாம்பு திருப்பத்தூர் வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு மதகுபட்டி அருகே உள்ள மண்மலைக் காட்டில் விடப்பட்டது.