குண்டாற்றில் கடைமுக பூஜை

குண்டாற்றில் நடைபெற்ற கடைமுக பூஜையில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.

Update: 2021-11-16 18:55 GMT
காரியாபட்டி,
குண்டாற்றில் நடைபெற்ற கடைமுக பூஜையில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர். 
சிறப்பு பூஜை 
 திருச்சுழி குண்டாற்று பகுதியில் ஐப்பசி கடைசி நாளான நேற்று கணவர்களின் ஆயுள் நீடிக்கவும், கன்னி பெண்களுக்கு திருமணம் நடக்கவும் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கடைமுக பூஜை நடைபெற்று வருகிறது. 
இதற்காக குண்டாற்றின் கரையில் ஏழு கன்னிப் பெண்கள், ஏழு வகையான மண்களை எடுத்து கங்கை, காவிரி, யமுனை, சரஸ்வதி, சிந்து, பிரம்மபுத்திரா, தாமிரபரணி ஆகிய கன்னி தெய்வங்களை உருவமாக செய்து வழிபட்டனர். மேலும் பெண்கள் தங்கள் கணவனின் ஆயுளை நீட்டிக்க சிறப்பு பூஜைகளையும் செய்தனர். இதற்காக பெண்கள் புத்தாடைகள், தங்க ஆபரணங்கள், 21 வகையான பழங்களை வைத்து கரும்பினால் பந்தல் அமைத்தனர்் பின்னர் அவர்கள் கரை மேல் உள்ள திருமேனிநாதர் மற்றும் வள்ளி அம்மனை தரிசித்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.
புனித நீராடல் 
இதுகுறித்து பெண்கள் கூறியதாவது:-  
 கடந்த 50 ஆண்டுகளாக குண்டாற்றில் கடைமுக பூஜையை நடத்தி வருகிேறாம். மேலும் இங்கு பூஜை செய்வது ராமேசுவரம் கடலில் புனித நீராடி பூஜை செய்வதற்கு சமமாகும். இப் பூஜை செய்வதால் குடும்பத்தில் உள்ள கஷ்டங்கள் தீரும், கணவனின் ஆயுள் நீட்டிக்கும். மேலும், கன்னிப்பெண்கள் ஆற்று நீரில் குளித்து வந்து ஏழு கன்னி தெய்வங்களை வணங்கினால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.
ஐப்பசி கடைசி நாள்
இதனால் ஒவ்வொரு வருடமும் ஐப்பசி கடைசி நாளன்று அருப்புக்கோட்டை, திருச்சுழி, மதுரை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் இங்கு கூடிவந்து பூஜையை நடத்தி வருகிறோம். 
இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்