4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை

4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது

Update: 2021-11-20 20:43 GMT
திருச்சி
திருச்சி காந்தி மார்க்கெட் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட இ.பி.ரோடு மரக்கடை சந்திப்பு பகுதியில் பொதுசுகாதார வளாகம் அருகே கடந்த செப்டம்பர் மாதம் 13-ந் தேதி ரிஷாந்த் என்ற வாலிபர் மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் காந்தி மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்விரோதம் காரணமாக நடந்த இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சூர்யா (வயது 21), ஹமீது (24), ஸ்டீபன் (27), வேலு (23), குருமூர்த்தி (20), வெங்கடேஷ் (29), சுரேந்தர் (33), மணிகண்டன் (19), அரவிந்த் (27) ஆகிய 9 பேரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். சிறையில் உள்ள இவர்களில் அரவிந்த், சூர்யா, ஸ்டீபன் ஆகியோர் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர்கள் என்று தெரிந்ததால் 3 பேர் மீதும் ஏற்கனவே குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது சிறையில் உள்ள வேலு மீது 10 வழக்குகளும், ஹமீது மீது 11 வழக்குகளும், சுரேந்தர் மீது 13 வழக்குகளும், வெங்கடேஷ் மீது 32 வழக்குகளும் நிலுவையில் இருப்பதாலும், மேலும் அவர்கள் குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர்கள் என்பதாலும் அவர்களையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய காந்தி மார்க்கெட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுமாறன், மாநகர போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் வேலு, ஹமீது, சுரேந்தர், வெங்கடேஷ் ஆகிய 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் ஜி.கார்த்திகேயன் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்