வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

Update: 2021-11-22 21:16 GMT
பெரம்பலூர்:

தனியார் நிறுவன ஊழியர்கள்
பெரம்பலூர் அருகே எளம்பலூர் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது 45). இவருக்கு ரூபாதேவி என்ற மனைவியும், ஹரி விக்னேஷ் என்ற மகனும், நந்தினி என்ற மகளும் உள்ளனர். ஆறுமுகமும், ரூபாதேவியும் பெரம்பலூரில் உள்ள தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். ஹரி விக்னேஷ் குரும்பலூரில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியிலும், நந்தினி தனியார் பள்ளியிலும் படித்து வருகின்றனர்.
கணவன்-மனைவி இருவரும் வழக்கம்போல் நேற்று காலை வேலைக்கு சென்ற விட்டனர். ஹரி விக்னேஷ் கல்லூரிக்கும், நந்தினி பள்ளிக்கும் சென்று விட்டனர்.
நகை - பணம் திருட்டு
ஹரி விக்னேஷ் கல்லூரி முடிந்து மதியம் வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து ஹரி விக்னேஷ் தனது தாய்க்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில், ரூபாதேவி வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததும், மேலும் பீரோவில் இருந்த 3 பவுன் நகை, ரூ.7,500 ஆகியவை திருட்டு போயிருந்ததும் தெரியவந்தது. இதற்கிடையே தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பலூர் போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்