மின்னல் தாக்கி விவசாயி சாவு

சாத்தூர் அருகே மின்னல் தாக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார். கன்றுக்குட்டியும் இறந்தது.

Update: 2021-11-23 19:34 GMT
சாத்தூர், 
சாத்தூர் அருகே மின்னல் தாக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார். கன்றுக்குட்டியும் இறந்தது. 
விவசாயி பலி 
சாத்தூர் அருகே உள்ள வன்னிமடையை சேர்ந்தவர் வேலுசாமி (வயது 69). விவசாயி.  இவர் தனக்கு சொந்தமான பசு மாடுகளை அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு கொண்டு சென்றார். அப்போது இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மேய்ச்சலுக்கு சென்ற பசுமாடு வீட்டிற்கு வந்து விட்டது. ஆனால் கன்றுக்குட்டி மற்றும் ேவலுசாமி வீட்டிற்கு வரவில்லை. 
உடனே வேலுசாமியின் குடும்பத்தினர் அவரை தேடி சென்றனர். அப்போது வன்னிமடையில் இருந்து  நென்மேனி செல்லும் சாலை ஓரத்தில் மின்னல் தாக்கி உடல் கருகிய நிலையில் அவர் இறந்து கிடந்துள்ளார். அவரின் அருகில் கன்றுக்குட்டியும் இறந்து கிடந்துள்ளது. 
போலீசார் விசாரணை 
இதுகுறித்து இருக்கன்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வேலுசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாடு மேய்க்க சென்ற விவசாயி மின்னல் தாக்கி பலியான சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

மேலும் செய்திகள்