வீட்டின் கதவை உடைத்து 24½ பவுன் நகை கொள்ளை

கீரிப்பாறை அருகே வீட்டின் கதவை உடைத்து 24½ பவுன் நகையை கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் ேதடி வருகிறார்கள்.

Update: 2021-11-23 19:58 GMT
அழகியபாண்டியபுரம், 
கீரிப்பாறை அருகே வீட்டின் கதவை உடைத்து 24½ பவுன் நகையை கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் ேதடி வருகிறார்கள். 
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
டீக்கடை உரிமையாளர்
கீரிப்பாறை அருகே உள்ள தடிக்காரன்கோணம் சி.எம்.எஸ்.நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவருடைய மனைவி பிரேமலதா (வயது 45). ராஜ்குமார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். 
பிரேமலதா தடிக்காரன்கோணம் சந்திப்பில் டீக்கடை நடத்தி வருகிறார். இதற்காக தினமும் அதிகாலையில் டீக்கடையை திறந்து வியாபாரம் செய்வது வழக்கம். 
24½ பவுன் கொள்ளை
இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணிக்கு வழக்கம் போல் டீக்கடையை திறந்தார். சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு சென்றார். அப்போது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு கட்டிலில் மறைத்து வைத்திருந்த 24½ பவுன் நகை மாயமாகி இருந்தது. பிரேமலதா தினமும் கடை திறக்க செல்வதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கதவை உடைத்து நகையை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
பின்னர், இதுபற்றி பிரேமலதா கீரிப்பாறை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று  விசாரணை நடத்தினர். மேலும், நாகர்கோவிலில் இருந்து மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. 
இந்த சம்பவம் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து நகை திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகிறார்.

மேலும் செய்திகள்