நெல் கொள்முதல் செய்யப்படாததை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்

ஒரத்தநாடு அருகே நெல் கொள்முதல் செய்யப்படாததை கண்டித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

Update: 2021-11-23 21:11 GMT
ஒரத்தநாடு;
ஒரத்தநாடு அருகே நெல் கொள்முதல் செய்யப்படாததை கண்டித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
திடீர் சாலை மறியல்
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள மேலஉளூர் பகுதியில் விவசாயிகள் தஞ்சை-பட்டுக்கோட்டை பிரதான சாலையில் மேல உளூர் பஸ் நிறுத்தம் அருகே நேற்று காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 
தாங்கள் அறுவடை செய்துள்ள நெல்லை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யாததை கண்டித்து விவசாயிகள் இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
போக்குவரத்து பாதிப்பு
இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஒரத்தநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விவசாயிகள், கடந்த 20 நாட்களாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யப்படவில்லை என்றும், இதனால் விற்பனைக்காக சாலை ஓரங்களில் பல நாட்களாக குவித்து வைக்கப்பட்டுள்ள நெல் மழையில் நனைந்து சேதம் அடைந்து வருவதாகவும் முறையிட்டனர். 
இதனை தொடர்ந்து நெல்லை விரைவாக கொள்முதல் செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக சுமார் 1 மணி நேரம் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்